Sunday, December 20, 2009

தொல்லை - ஒரு நிமிட சிறுகதை

அலுவலகம் முடிந்து சாயங்காலம் எலக்ட்ரானிக் சிட்டியிலிருந்து அல்சுரிலிருக்கும் வீட்டிற்க்கு வருவதற்குள், த.நா வில் என் சொந்த ஊருக்கு போய் வந்துவிடலாம். எறும்பை விட கொஞ்சம் வேகமாக வாகன நெரிசலில் ஊர்ந்து வருவதற்க்குள் 2.5 மணிநேரம் ஆகிவிடும். களைப்பாக வீடு வந்து கதவை திறக்கும் போதே, வீட்டினுள் பசங்க கச்சேரி உச்சஸ்தாயில் இருந்தது. மனைவி இரண்டு மகன்களையும் டாம் & ஜெரி போல் விரட்டி விரட்டி அடித்து கொண்டிருந்தாள்.

“என்னால முடியலைங்க! பிராணணை போகுது, இவங்க பண்ற தொல்லை தாங்கமுடியல சாமி, நீங்க ஜாலியா காலையில ஆபிஸ் போய் நைட் வர்றிங்க, உங்களுக்கு எங்கே தெரியப்போது நான் அனுபவிக்கிற கொடுமை”

”பெரியவன் வீட்டுக்குள்ளே கிரிக்கெட் விளையாடி ஷோகேஸ் கண்ணாடி உடைச்சு வீடெல்லாம் தூம் பண்ணிட்டான். சின்னவன் வாஷ் பேசின் குழாயை திறந்து, வீடு முழுவதும் ஸ்விமிங்பூல் மாதிரி நீரை கொட்டி துவம்சம் பண்றான். நான் எல்லாத்தையும் சுத்தம் பண்ணி முடிவதற்குள், ரெண்டு பேரும் கட்டி புரண்டு சண்டை போட்டு பெட்ரூமையே ஒரு வழி பண்ணிட்டாங்க. என்னால சத்தியமாய் முடியலைங்க”ன்னு சொல்லும்போதே அவள் நிலை பரிதாபமாக இருந்தது.

”இதோ பாருடி, இன்னும் சில வருடங்கதான் இவங்க கவலையில்லாம விளையாடறதுல்லாம், அதன் பிறகு மேற்படிப்புக்காக வெளியுருக்கு சென்று நம்மளைவிட்டு ஹாஸ்டல்லில் தங்கி படிக்க போய்விடுவாங்க. அப்புறம், வேலைக்காக வெளிநாட்டிற்கோ அல்லது வெளிமாநிலத்திற்கோ கண்ணுக்கெட்டாத தூரத்திற்க்கு சென்றுவிடுவார்கள். ஏதோ திபாவளி, பொங்கல் என்று பண்டிகையின்போது நம்மை பார்க்க வருவார்கள், கண் மூடி திறப்பதுற்குள் டாடா பைபை சொல்லி போய்யினே இருப்பார்கள். நாம் மட்டும் தன்னந்தனியாக உனக்கு நான் எனக்கு நீ ன்னு எப்படா அடுத்த தீபாவளி வரும்ன்னு காத்துகொண்டிருக்க வேண்டியதுதான். அப்போழுது நாம் அனுபவிக்கும் வலிக்கு இவர்கள் இப்போழுது பண்ணும் குறும்புகள்தான் மருந்துகளாய், சுகமான சுமைகளாய் நமக்கு அசைபோட்டு காலம் தள்ள சுவடுகளாய் இருக்கும்னு சொல்லி கொண்டிருக்கும் போதே என் நெஞ்சினில் தலையை சாய்த்தாள். சட்டை நனைந்து கொண்டிருப்பதை உணரமுடிந்தது. அவள் மனமும்.