Friday, September 11, 2009

திருட்டு இலாபத்தில் பங்கு கொடுக்கும் பேருந்து

இரண்டு சக்கர வாகனத்தை சர்விஸ்ஸுக்கு விட்டிருந்ததால், 5 km தள்ளி உள்ள அலுவலகத்திற்கு பேருந்தில் செல்ல அருகில் உள்ள பேருந்து நிருத்ததிற்கு விரைந்தேன். நிறுத்தம் அருகில் வந்தபோது, வழக்கம்போல் அப்போதுதான், நான் போக வேண்டிய பேருந்து கிளம்பி சென்றது. ச்சே! ஏன்தான் நமக்கு மட்டும் இப்படி.., 10 விநாடி முன் வந்திருந்தால் பிடித்திருக்கலாம், எல்லாம் என் ராசி என்று சலித்துக்கொண்டு அடுத்த பேருந்துக்காக் காக்க வேண்டியதாயிற்று. ஒரு வேளை, கிளம்பும் போது கீழ் வீட்டு குழந்தையை கொஞ்சாமல் வந்திருந்தால் பிடித்திருக்கலாமோ அல்லது ஒன்றுக்கு நான்கு முறை கதவு தாழிடபட்டிருக்கிறதா என்று செக் செய்யாமல் வந்திருந்தால் பிடித்திருக்கலாமோ என்று என்னென்னமோ மனம் புலம்பியது.

ஒரு வழியாக புஷ்பக் வகை பேருந்து வந்தது. இந்த வகையான பேருந்தில் நடத்துனர் கிடையாது, ஒட்டுநர் மட்டும்தான், அதனால ஒரே ஒரு வழி மட்டும் தான் இருக்கும். ஒரே வழியில் எல்லோரும் இறங்கி ஏறிய பின்னர், வண்டி புறப்பட்டது. ஓட்டுநரே டிக்கட் கொடுத்து வண்டியையும் ஓட்டுவதால் காலம் விரயமாகும். ரொம்ப தூரம் செல்லும்போது, இந்த வண்டியை தவிர்ப்பது உத்தமம். ஒரு கையில் ஸ்டேரிங்கை பிடிச்சிக்கிட்டு, அசால்ட்டாக சாலையே பார்க்காமல், இன்னோரு கையில் சில்லரை கொடுத்து ஓட்டும் போது, எனக்கு முதல் முறை ப்ளைட்ல போவது போல் பயமாக இருந்தது. ஒரு காலத்திலே கூட்டம் இல்லாத ரூட்டில் அறிமுகப்படுத்த இவ்வகையான பேருந்து, இன்னிக்கு கூட்டம் நெரிசலாக மாறினாலும், இதையே போக்குவரத்து நிறுவனம் பின்பற்றுவது வேடிக்கையாக இருக்கிறது.

என் ஸ்டாப்பிங் சொல்லி 7ரூ டிக்கெட்க்கு 10ரூ கொடுத்தேன். ஆனால் டிக்கெட்க்கு பதிலாக டிரைவர் 5ரூ மீதி கொடுத்து, அடுத்த நபரிடம் காசு வாங்க, நான் கூட்ட நெரிசலில் உள்ளே தள்ளப்பட்டேன். 5ரூ அவருக்கு, 2ரூ நமக்கு லாபம். அடடா, இன்போசிஸ் நாராயணமூர்த்திக்கு பிறகு லாபத்தில் பங்கு கொடுப்பது பெங்களுர் பேருந்து மட்டுமே இருக்க முடியும். இறங்க வேண்டிய நிறுத்தம் மிக அருகில் இருந்தால் இந்த ரிஸ்க்கை பெரும்பாலும் அவர்கள் எடுக்க தயங்குவதில்லை. இருந்தாலும் எனக்கு மனசு படபடத்தது, யாராவது செக்கிங் வந்துவிட்டால் ஆப்புதான்.

ஒரு வழியாக என் ஸ்டாப்பிங் வந்ததும், பள்ளியை விட்டு குழந்தைகள் மாலையில் வீட்டை நோக்கி வேகமாக வருவதுபோல, பேருந்திலிருந்து விடுப்பட்டேன். சட்டை பாக்கெட்டில் கணத்த 2ரூ வை எடுத்து, பஸ் ஸ்டாப்பிங்கில் பிச்சை எடுத்து கொண்டிருந்த ஏழை சிறுவனுக்கு கொடுத்ததும் மனசு லேசானது. அரசாங்கமும் இதைத்தான் செய்திருக்கும் என்று என்னையே சமாதானப்படுத்திக்கொண்டேன்.




8 comments:

சுவாசிகா said...

’எவன் ஒருவன் தவறு செய்யும் சூழ்நிலையில் தவறு செய்யாமல் இருக்கிறானோ அவந்தான் நல்லவன்’ என்று எங்கோ படித்தது இங்கே ஞாபகத்துக்கு வந்து தொலைக்கிறது :)

டிக்கெட் கொடுக்காததால் அந்த காசு அரசாங்கத்துகு இல்ல..

இதில் (கொள்ளை) லாபம் அடைந்தது நீங்களும் ஓட்டுனரும்தான் ;)

ஆமா..நீங்க நல்லவரா?? கெட்டவரா!!

அன்புடன்,
சுவாசிகா
http://ksaw.me

RaviSuga said...

நன்றி சாமி. கூட்ட நெரிசலாலும், ஓட்டுநரை தர்மசங்கடத்தில் ஆழ்த்த வேண்டாம் என்றதாலும், அமைதியாக இருந்துவிட்டேன். ஆனால், அரசாங்கம் செய்ய வேண்டியதை நான் செய்துவிட்டதால் சமாதானம் அடைந்தேன் என்று குறிப்பிட்டிருந்தேனே.
ரவி சுகா

பிரபாகர் said...

நல்ல அனுபவம். அது போன்ற ஆட்களை ஊக்குவிக்கக் கூடாது.

நடை நல்லாருக்கு. இன்னும் நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்.

பிரபாகர்.

பிரபாகர் said...

தமிழ்மணத்தில் உங்கள் வாக்கையும் பதிவு செய்யுங்களேன்...!

பிரபாகர்.

Anonymous said...

அச்சச்சோ - டிக்கெட் கொடுக்காமல் பணத்தைமட்டும் வாங்கிக்கொள்ளும் நடத்துனர்களைப் பார்த்திருக்கிறேன் (நேரடி அனுபவம் இல்லை), ஆனால் இப்படி லாபத்தில் பங்கு கொடுத்து நம்மையும் கூட்டுக் கொள்ளையர்களாக்குவார்கள் என்று தெரியாது. கண்டிக்கவேண்டிய விஷயம் இது.

என் மகளைப் பேருந்தில் அழைத்துச் செல்லும்போது பெரும்பாலான நடத்துனர்கள் அவளுக்கு அரை டிக்கெட் தருவது இல்லை - நானாகக் கேட்டாலும், ‘வேணாம் சார்’ என்கிறார்கள், வற்புறுத்தி வாங்குகிறேன். அரசாங்கப் பணத்தை அள்ளி இறைக்க இவர்கள் யார்?

- என். சொக்கன்,
பெங்களூர்.

RaviSuga said...

நன்றி பிரபாகர், சொக்கன்.
//அது போன்ற ஆட்களை ஊக்குவிக்கக் கூடாது.//
ஆமாம், டிக்கெட் கேட்டு வாங்குவது நம் உரிமை.
//தமிழ்மணத்தில் உங்கள் வாக்கையும் பதிவு செய்யுங்களேன்//
பதிவு செய்தேன், ஆனால் முகப்பில் ஏனோ வரமாட்டேங்குது.
//கூட்டுக் கொள்ளையர்களாக்குவார்கள்// உண்மை, பங்கு இல்லையென்றால், நம்மாள் டிக்கெட் வாங்காம விடமாட்டாங்க :-) mutual benefit

TeckSnippets said...

Win-1/2 win siutation

அரவிந்தன் said...

இது பெங்களூரில் பல வருடங்களாக நடக்கும் கொள்ளைதான்.

இது அரசாங்கத்திற்க்கு நன்கு தெரியும்.

தமிழ்நாட்டில் 3ரூ டிக்கெட் வாங்கி செல்லும் தூரத்திற்க்கு இங்கு ரூ7 வாங்கினால் பொது மக்களும் இந்த கொள்ளைக்கு துணைபோவதில் வியப்பேதுமில்லை.


அதேப்போல் இங்கு குழந்தைகளுக்கு 5 வயது வரை டிக்கெட் வாங்க சொல்வதுமில்லை

Post a Comment

இந்த பதிவு பற்றி உங்கள் கருத்துகளை தெரிவித்தால் அடுத்த தடவை இதை விட சுமாரான பதிவு பதிக்கப்படும் :-)